ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா?
ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா?
ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா?
தீக்குளித்தால் மட்டுமே உத்தமி என்று ஏற்பேன் என்று சொன்னாரா?
சினிமாவிலும் சீரியலிலுமே ராமாயணத்தை தெரிந்துகொண்ட நமக்கு அப்படித்தான் தோன்றும். இது பற்றி வால்மீகியும் கம்பனும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மாயமான் வடிவில் வந்த மரீசன் ராமபாணத்தால் அடிபட்டபோது 'ஹே சீதா, ஹே லக்ஷ்மணா' என்று ராமனின் குரலில் அழைத்துவிட்டு உயிரை விடுகிறான். இதனால் கலக்கம் அடைந்த சீதை லக்ஷமனை ராமனுக்கு உதவுமாறு பணிக்கிறார். ஆனால் இலக்குவன் அண்ணனுக்கு ஆபத்து விளைவிக்கும் சக்தி மூன்று உலகிலும் இல்லை, மேலும் அண்ணன் உங்களைப் பாதுகாக்க என்னைப் பணித்து இருக்கிறார் என்று கூறி மறுத்துவிடுகிறார்.
ராமன் அபயக் குரல் கேட்டும் அசையாமல் என் அருகில் நிற்கும் உன் எண்ணம் என்ன ? (இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் என்று நீங்களே ஊகியுங்கள்) என்று கேட்டு கடும் சொற்களால் இலக்குவனை கடிந்துகொண்டு சீதை தன் உயிரை விடத் துணிந்தார். வால்மீகி ராமாயணத்தில் சீதை 'இலக்குவா என் மீதுள்ள ஆசையாலேயே நீ ராமன் அழிய விரும்புகிறாய்' என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகிறார். கம்பர் அதை வெளிப்படையாக சொல்லவில்லை. சீதையின் பேச்சால் இலக்குவன் ராமனைத் தேடிப் புறப்படுகிறார்.
ராமனும் இலக்குவனும் சந்திக்கும்போது , ராமன் சீதையைத் தனியாக விட்டு ஏன் வந்தாய் என இலக்குவனை கேட்கிறார். அப்போது இலக்குவன் நடந்தவற்றை எல்லாம் ராமனிடம் சொல்கிறார். இலக்குவனைப் பார்த்து இப்படியொரு சந்தேகப் பேச்சை பேசிய சீதையின்மீது கோபமாகவே பர்ணசாலைக்கு வருகிறார் ராமன். அங்கே சீதையைக் காணாமல் துடித்துப் போகிறார். அதன் பின்னர் சீதையை நினைத்து ராமன் பட்ட துயரை அழுத அழுகையை வால்மீகியும் கம்பரும் நிறையவே வர்ணித்திருக்கிறார்கள்.
போர்க்களத்தில் மாய சீதை உருவத்தை இந்திரசித்து தலையை துண்டித்து கொன்ற காட்சியை ஹனுமன் சொல்லக் கேட்ட ராமனின் துக்கத்தை பலபாடல்களில் கம்பர் வர்ணிக்கிறார் . தன் வாழ்நாளில் சீதையைத் தவிர வேறொரு பெண்ணை ராமன் மனதாலும் நினைத்தது இல்லை. இவ்வளவு அன்புகொண்ட ராமன் 10 மாதங்கள் பிரிந்த சீதையைச் சிறையில் இருந்து மீட்டபோது நடந்த நிகழ்ச்சிகளைச் சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.
அனுசூயை உபதேசித்த மந்திரத்தின் சக்தியால் சீதை பசி, தாகம், தூக்கம் ஏதும் இன்றி ஒரே அழுக்கான ஆடையுடன் ஒரே இடத்திலேயே அமர்ந்திருந்தார். சீதை எப்படி அழுக்கான ஆடையில் இருந்தார் ராவணனிடம் எப்படி கடிந்து பேசினார் என்பதை எல்லாம் ஹனுமான் இலங்கையில் இருந்து வந்ததுமே இராமனிடம் விவரித்து இருக்கிறார்.
போரில் வெற்றி பெற்றதும் இராமன் வீடணனைச், 'சீதையை அலங்கரித்து சீரொடும் அழைத்து வா' என்று அனுப்புகிறான். அழுக்கான ஆடையுடன் இருந்தவாறே தான் வருவேன் என்று சொன்ன சீதையை இராமன் ஆணையைக் கூறி அலங்கரித்து வரச் செய்து அழைத்து வருகிறான் வீடணன். வால்மீகி ராமாயணத்திலும் இப்படித்தான் இருக்கிறது சீதை வானுலக மங்கையரும் நாணும்படி அழகாக அலங்கரித்து வருகிறார்.
இலக்குவனின் அன்பைத் தவறாகப் பேசிய சீதையை இப்போது ராமன் இகழந்து பேசுகிறார். ராமன் தன் அன்பர்களின் மனத்தை புண் படுத்தியவர்களை ஒரு போதும் மன்னிப்பதில்லை. அது சீதா பிராட்டியாகவே இருந்தாலும். கணவனைப் பிரிந்து இருக்கும் ஒழுக்கமான பெண்கள் இப்படி அலங்கரித்து கொள்வார்களா என்று கேட்கிறார். (ராமன் தான் வீடணனிடம் சீதயை அலங்கரித்து வரச்சொன்னது). ராமன் சீதையிடம் உன் ஒழுக்கத்தை நிரூபிப்பாய் அல்லது நீ விரும்பும் வழியில் செல்வாய் என்று சொன்னர். ஆனால் அது சந்தேகத்தால் அல்ல. இலக்குவன் மூது அபாண்டமாக் பழை சொன்னதற்கான் தண்டனை.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், கம்பன் பல பாடல்களில் சீதையை “கற்புக்கு அணி” என்று பாடினாலும் இராவணன் தூக்கி வந்து சிறை வைத்ததாலேயே தான் தூய்மை இழந்துவிட்ட தாக சீதையே புலம்புகிறார். "எச்சில், என் உடல்; உயிர் ஏகிற்றே; இனி நச்சு இலை" -- நச்சு என்றால் விருப்பம். இங்கே வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்று பொருள். சீதையின் இந்த எண்ணமும் வருத்தமும் ராமனுக்குத் தெரியும்.
இப்போது ராமன் கடுஞ்சொற்கள் பேசியதும், ரோஷம் கொண்ட சீதை இலக்குவனை அழைத்து சிதையை மூட்ட சொல்லி அதில் புகுகிறார். சீதையின் கற்பின் பெருமையையும் , சீதையை நெருப்பு சுடாது என்பதையும் இலங்கையில் இருந்து திரும்பியபோதே ஹனுமானின் மூலம் ராமன் அறிந்திருந்தார். எனவே சீதையை தடுக்க முயலவில்லை. அதன்பின் அக்கினி பகவானும் தேவர்களும் வந்து சீதையின் பெருமையைக் கூறி ராமனுடன் சேர்த்துவைக்கிறார்கள்.
ராமன் இப்படி பேசாமல் இருந்தால் எஞ்சியிருந்த வாழ்க்கை எல்லாம் சீதை “எச்சில் என் உடல்” என்னும் எண்ணத்துடனே வாழ்ந்திருப்பார். நம் புரட்சியாளர்களும் சீதையை வைத்து சிம்பதி கிரியேட் செய்திருப்பார்கள். அது முடியாததால் ராமாயணயத்தைத் திரித்து ராமனைக் கெட்டவன் என்றும், தான் பெற்ற சாபத்தால் விருப்பமில்லாதப் பெண்ணைத் தொட்ட அடுத்த கணமே செத்துவிடுவோம் என்கிற பயத்தில் இருந்த ராவணனை நல்லவன் என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்

No comments